Thursday, March 12, 2015

குளிர்ந்து வீசும் தென்றல் ...!!




யமுனைக் கரையில் யதுகுலக் கண்ணன் 
அமுதாய்ப் பொழிந்தனன் அன்பை ! - குமுதமாய்ப் 
பூத்தராதை பாடிப் புகழ்ந்திடக், கேட்டுவீசும் 
ஆத்தோரத் தென்றல் குளிர்ந்து 

குளிர்ந்துவீசும் மாருதமும் கோகானம் கேட்டு 
தளிர்மரத்தைத் தாலாட்டும் தாயாய் !- தெளிந்தோடும் 
ஆற்றோரப் பூஞ்செடியும் ஆனந்த ஆடலைப் 
போற்றி வணங்கும் மலர்ந்து .

மலர்க்கொடியாள் மையலினால் மாயனுட  னாட
சிலம்பொலியும் நாதமெனச் சேர - அலம்பும் 
நதியலைகள் பையவந்து நாணமுடன் நோக்கும் 
அதிசயக் காட்சி வியப்பு !

வியந்தே ரசித்தனள் வேணுகானம் மீட்ட
மயக்க நிலையில் மகிழ்ந்து - இயற்கையும் 
கூடிக் களித்திடும், கோபால னைக்காண  
ஓடிவரும் மேகம் விரைந்து 


No comments:

Post a Comment