Pages

Sunday, March 29, 2020

மெல்ல மலரும் மனம் ...!!!

கல்லில் கலைவண்ணம் காணும் பொழுதிலும்
சொல்லில் செதுக்கிய சுந்தரப் பாவிலும்
நல்லிரவில் கேட்கும் நதியின் இசையிலும்
மெல்ல மலரும் மனம்.
கோல நிலவொளியில் கொட்டு மருவியை
நீலவிழி யாற்பருக நெஞ்சம் நனைந்திடும்
சில்லென்ற தென்றலில் தித்திக்கும் கானத்தில்
மெல்ல மலரும் மனம்.
பசியை விரட்டிடும் பைந்தமிழ்த் தேனாய்
வசியப் படுத்தும் மழலை மொழியிலும்
முல்லைச் சிரிப்பிலும் முத்த மழையிலும்
மெல்ல மலரும் மனம்.
சின்ன விரல்தீட்டும் தீந்தமிழ்ப் பாவிலே
கன்னி மயிலாடக் காதல் மொழிபேச
அல்லும் பகலும் அசைபோட்டுப் பார்த்திட
மெல்ல மலரும் மனம்.
( ஈற்றடி - கவிமாமணி ஹரிகிருஷ்ணன் அவர்கள்)
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment