Pages

Thursday, July 4, 2019

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் !!

அலையாடு நதியாட மெதுவாக வளியாட அமைதியாய் நாணலாடும்!
அழகான மலராட மதுவுண்ட வண்டாட அதனோடு செடிகளாடும்!
மலைமீது முகிலாட அருவியில் நீராடி மரமேறி மந்தியாடும்!
வளமான வயலாட மழைமேக மிருண்டிட வண்ணமாய் மஞ்ஞையாடும்!
இலைகளில் பனித்துளி மின்னிடும் பொன்னாக இதமாக மகிழ்ந்தாடும்!
இனிமையாய்க் குயிலோசை வருடிடும் செவியோர(ம்) இதயமே களவுபோகும்!
நிலவோடு மீனாட நீலவான் வெளியாட நினைவுகள் தாலாட்டிடும்!
நெறியோடு வாழ்விலே இயற்கையை மதித்திடு நீடித்த வரமாகுமே!!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment