Pages

Sunday, December 9, 2018

ஏழ மவ பொலம்பல்...!!

காச்சமரம் சாஞ்சிருச்சி
காத்துகொன்னு போட்டுருச்சி !
கண்ணுபட்டுப் போயிருச்சோ
காலனது வேலதானோ ??
பூச்சூட்டிப் பாத்தபுள்ள
பூப்படஞ்ச செல்லமவ
பூமிக்குப் பாரமுன்னு
புயல்கொண்டு போயிருச்சோ ??
பேச்செழந்து நடபொணமா
பீதியில ஒறஞ்சிநிக்கோம் !
பேக்காத்துப் போட்டஆட்டம்
பேதலிக்க வச்சிருச்சே !!
சீச்சீன்னு யெம்பொழப்பு
சீரழிஞ்சி போயிருச்சே !
சீறிவந்த கசாப்புயலு
செறகொடிச்சிப் போட்டிருச்சே !!
காதடச்சிப் போயிருக்கு
கடும்பசியும் தாங்கலயே
கால்வவுறு நெரம்பலயே
கால்கையில வலுவுமில்ல !!
வேதனையச் சொன்னாத்தான்
வெந்தமனம் ஆறுமய்யா
வேரோட நாசமானா
வேறென்ன செய்வதய்யா ??
ஆதரவா அரசுமில்ல
அக்கறையும் காட்டவில்ல
ஆருசெஞ்ச பாவமிதோ
ஆண்டவனே நீயுமில்ல !!
ஏதுசெய்ய என்னசெய்ய
எடுத்துரைக்க நாதியில்ல
ஏழைமக்க வாக்கையில
என்னைக்கும் ஏத்தமில்ல !!
பாடுபட்ட கழனியெல்லாம்
பாழாக்கிப் போட்டுருச்சே
பாருசாமி எங்கோலம்
பைத்தியமா ஆக்கிருச்சே !!
வீடுவாசல் ஏதுமில்ல
வீதியெது தெரியவில்ல
வேறுபொழப் பேதுமில்ல
விதிப்படியே நடக்கட்டும்
காடுகொண்டு போறவரை
கைகாலு சுகமிருந்தா
காடுகர வெளையவச்சி
கரையேறி பொழச்சிடுவோம்
நாடிவந்து பலவொதவி
நல்லமன சோடுசெஞ்சி
நனையவச்ச சாமிகளே
நன்றிசொல்ல வார்த்தையில்லே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment