கிழக்கால கதிரவனும்
கெளம்பிமேல வருகுது !
அழகான வெண்ணிலவ
அனுப்பிவிட்டுச் சிரிக்குது !
கழனியிலே காத்தடிக்கக்
கதிரெல்லாம் அசையுது !
வழக்கம்போல பசுங்கொடியில்
மல்லிமொட்டு விரியுது !
கூரமேல ஏறிநின்னு
கொண்டச்சேவல் கூவுது !
ஈரக்காத்து எதமாக
இதயத்த நனைக்குது !
வீரபாண்டி கோயிலிலே
வெள்ளிமணி ஒலிக்குது !
சாரப்பாம்பு பொந்துக்குள்ள
சலசலத்து ஓடுது !
தூங்குமூஞ்சி மரமெல்லாம்
சுருண்டயில திறக்குது !
பூங்குயிலும் ராகத்தோடு
பூபாளம் பாடுது !
மூங்கிலிலைப் பனித்துளியும்
முத்தாக மின்னுது !
தேங்கிநிக்கும் குளத்தினிலே
செங்கமலம் சிரிக்குது !
மாமரத்துக் கிளியழகா
மாங்காயக் கொறிக்குது !
சாமரமும் வீசினாப்போல்
சாஞ்சகிளை ஆடுது !
பூமணக்கும் தென்றலிலே
புதுராகம் கேக்குது !
தாமரையும் இதழ்விரிக்கத்
தவிப்போடு பாக்குது !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment