Pages

Tuesday, February 17, 2015

காளையின் காதல்




ஊதா வண்ண குறிஞ்சி மலரே 
ஊதற் காற்றின் மென் சிலிர்ப்பே 
ஊட்டி மலையின் கோல எழிலே 
ஊஞ்சலாடுவோம் வா வா வா ! 

கரு நீல வசிகர விழியழகே 
கன்னம் குழி விழும் முகத்தழகே 
கடற்கரை மணலில் நில வொளியில் 
கவிதை புனைவோம் வா வா வா ! 

நீல வான வீதியின் பாதையிலே 
நீந்தி செல்லும் தாரகை நீயே 
நீயில்லா மனதில் ஒளி யேது 
நீட்பு போக்கவே வா வா வா ! 

பச்சைப் பட்டு நீ உடுக்கையிலே 
பளிங்கு மேனியும் பளிச்சிடுதே 
பவளம் போலும் இதழ் சிரிப்பே 
பழகிக் களிப்போம் வா வா வா ! 

மஞ்சள் மின்னும் வதனத்திலே 
மலர்கள் மணக்கும் கூந்தலிலே 
மனம் வருடும் தென்றல் காற்றினிலே 
மயங்கிக் கிடப்போம் வா வா வா ! 

காவி இழைத்த கோலத்திலே 
காரிகை கைவண்ணம் மிளிர்கிறதே 
காந்தமாய் இதயம் கவர்பவளே 
காதலில் திளைப்போம் வா வா வா ! 

சிவந்த மாதுளை ரத்தினமே 
சிரிப்பில் முல்லை தோற்றிடுமே 
சித்திரம் போன்ற எழிலணங்கே 
சிணுங்கி பேசுவோம் வா வா வா !! 

வான வில்லின் வர்ண ஜாலமே 
வாடா மலரின் சுக வாசமே 
வாசிக்க தித்திக்கும் கவிமழையே 
வாட்டம் போக்கவே வா வா வா !!

No comments:

Post a Comment